Wednesday, March 28, 2018

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire):



உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலைமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும்
வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.
அவர்தான்
ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும்,
நம்பிக்கை துரோகத்திற்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும்,
காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான 'ஜூலியஸ் சீசர்'.
பிறப்பு:
ஜுலியஸ் சீசர் ரோம் நகரில் கி.மு. 100 ஜுலை 13 இல் பிறந்தார். இவருக்கும் தந்தைக்கும் ஒரே பெயர்: கேயஸ் ஜுலியஸ் சீசர் என்பதாகும். தாயின் பெயர், அவ்ரேலியா கொட்டா: இவருடைய முன்னோர்களில் ஒருவர் அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறந்தார். அதைக் குறிக்கும் சிசேரியன் என்பதை ஒட்டிய சீசர், அவருடைய குடும்பத்திற்குப் பொதுப்பெயர் ஆயிற்று எனப் பிளினி எனும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இப்பொழுதுகூட குழந்தையின் பிறப்பிற்கான அறுவை சிகிச்சையை சிசேரியன் என்கிறார்கள்.
அரசியல் சூழல்:
அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.

அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். ரோமில் இரண்டு பிரிவினரிடையே மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. செனட் சபைக்கு ஆதரவான பழமைவாதிகள் செல்வம் மிக்கவர்களுக்கு ஆதரவாளர்கள். எளிய வெகுமக்களின் தலைவர்கள் அவர்களை எதிர்த்தனர். எளியவர்களுக்குப் பொதுச் சபைகள் ஆதரவு தந்தன. சீசரின் உறவினரான மரியஸ் வெகுமக்களின் தலைவர். அவருக்கும், செனட் சபையின் ஆதரவு பெற்ற சுல்லாவுக்கும் மோதல் ஏற்பட்டது.
அது உள்நாட்டுப் போராக வளர்ந்தது. இறுதியில் வெற்றிபெற்ற சுல்லா, தன்னைச் சர்வாதிகாரியாக நியமித்துக்கொண்டார். மரியஸின் ஆதரவாளர்களைக் கொன்றார் அல்லது நாடு கடத்தினார். இந்தக் கடுமையான நடிவடிக்கை, சீசர் மீதும் பாய்வதற்கு இருந்தது. இருப்பினும், சுல்லாவின் ஆதரவாளர் சிலரின் பரிந்துரையால், ஜுலியஸ் சீசர் தப்பினார்சுல்லாவின் இறப்பிற்குபின் ரோம் திரும்பினார் சீசர்.

இராணுவப்பணி:
தம்முடைய 18 ஆம் அகவையில், கி.மு. 82 இல், சீசர் ராணுவத்தில் சேர்ந்தார். இக் காலத்தில் துருக்கி எனப்படும் ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். கி.மு. 78 இல் சுல்லா இறந்த பின்பு சீசர் ரோம் திரும்பினார். சிறந்த சொற்பொழிவாளர் என்ற பெயரைத் தாங்கி, வழக்குரைஞர் தொழில் செய்தார். தமது விவாதத் திறனை வளர்த்துக்கொள்ள, அதைப்பற்றிய படிப்பிற்காக, கிரீஸ் நாட்டிற்குக் கிழக்கில் உள்ள ரோட்ஸ் தீவு சென்றார். வழியில் ஏஜியன் கடலைக் கடக்கும் பொழுது, கடற் கொள்ளையரால் கடத்தப்பட்டார். விடுதலைத் தொகை கட்டி விடுதலையானார். விடுவிக்கப்பட்டவுடன், கப்பற் படையைத் திரட்டி, கொள்ளையர்களைப் பிடித்து, சிலுவையில் அறைந்து கொன்றார்.

மூவர் ஆட்சி:
ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு, ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். ரோம் வரலாற்றில் இது முதல் மூவராட்சி எனப்படுகிறது. கி.மு. 53இல் போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட்டார். ஆகையால் மூவராட்சி முடிவுக்கு வந்தது. பாம்பே, மற்றும் சீசர் இருவருக்கும் இடையில் அதிகாரப் போட்டி வலுத்தது.

கால் படையெடுப்பு:
படைத்தளபதியாக தேர்வான அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய 'Gaul' பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும். இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

சரியான முடிவு:
தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு  ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் பாம்பே, கிரீஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு, பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு பாம்பே எகிப்து மன்னனால்  கொல்லப்பட்டார். முழுமையாக வெற்றிப் பெற்ற சீசர் ரோமின் சர்வாதிகாரியானார்.  

கிளியோபாட்ரா:
பிறகு கிரேக்க நாட்டின் மீது போர் தொடுத்தார் சீசர். அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவருடைய மனைவி கிளியோபாட்ராவை பார்த்தவுடன் காதல் கொண்டார் சீசர். அந்தப் பேரழகியும் சீசரும் காதலர் ஆயினர்; கூடிக்களித்தனர். பின்பு, ஆசியா மைனரில் வெற்றியுடன் போர் ஒன்றை முடித்துக் கொண்டு எகிப்திலிருந்து ரோம் நகருக்கு திரும்புவதற்கு முன்னால் சீசர் கிளியோபட்ராவை தன் சார்பில் எகிப்தின் அரசியாக நியமித்தார். வட ஆப்பிரிக்காவில் இருந்த தன் மற்ற எதிரிகளை வென்ற பின்னர், கி.மு. 47-ஆம் ஆண்டு தனது ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்திய மனநிறைவுடன் ரோமிற்குத் திரும்பினார். ஆனால் சீசர் அதனுடன் நிற்கவில்லை. கி.மு. 44 - ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போரிட்டு வந்தார்.

சீசர் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னை வாழ்நாள் சர்வாதிகாரியாகப் பிரகடனம் செய்து கொண்டார்.
            ரோமன் காலண்டர் மாற்றி அமைக்கப்பட்டது.
நகரெங்கும் சீசரின் சிலைகள் நிறுவப்பட்டன.
நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது.

தன் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்க வேண்டும் என எண்ணினார் என்பதற்காக அவரை இனியும் விட்டு வைத்தால் ரோம் நகரம் சீரழிந்து விடும் என அவருக்கு நெருங்கியவர்கள் சீசரைக் கொல்லத் துணிந்தார்கள்.

நம்பிக்கை துரோகம்:
தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை 'Ides of March' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார். நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் "Et tu, Brutes?" ("You too, Brutus?") அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

சீர்திருத்தங்கள்:
ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம். ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை 'லீப்' ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே 'ஜூலியன் காலண்டர்' என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.
சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் 'கைசர்' என்றும் ரஷ்ய அரச பட்டம் 'ஷா' என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே 'சீசர்' என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர். 


பல பிரதேசங்களை கைப்பற்றிய வீரமும், தன்னிடம் வீழ்ந்தவர்களை கெளரவமாக நடத்திய விவேகமும், முறையற்ற ஆணைகளுக்கு அடிபணியாத தைரியமும், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும், இவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையாக விளங்கிய கட்டொழுங்கும்தான் சீசருக்கு "ரோம சாம்ராஜ்யம்" எனும் வெற்றி அவர் வசமானது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீசருக்கு கைகொடுத்த அதே பண்புகள் இப்போது நமக்கும் கைகொடுக்கும், விடாமுயற்சியோடு போராடினால் நாம் விரும்பும் வெற்றி நம்மை தேடி வரும்.





No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்