Tuesday, May 13, 2014

பள்ளிக்கூடத்திலேயே கல்வித்தகுதியை ஆன்–லைனில் பதிவு செய்யலாம் கல்வித்துறை, வேலைவாய்ப்புத்துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள் தங்கள் கல்வித்தகுதியை பள்ளிக்கூடங்களிலேயே ஆன்–லைனில் பதிவு செய்து கொள்ள வேலை வாய்ப்புத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஆன்–லைனில் பதிவு
பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவுக்காக தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்–லைனில் பதிவுசெய்வதற்கு பள்ளி கல்வித்துறையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ–மாணவிகள் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பதிவு
செய்யப்படும் மாணவ–மாணவிகளுக்கு முதல் 15 நாட்களுக்கு ஒரே தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
ரேஷன்கார்டு
வேலைவாய்பு அலுவலகத்தில் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்யாமல் பிளஸ்–2 கல்வித்தகுதியை முதல் முறையாக பதிவு செய்ய விரும்புவோர் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்கு செல்லும்போது, குடும்ப அட்டையை (ரேஷன்கார்டு) உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
மாணவர்களுக்கு வேண்டுகோள்
கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதையொட்டி ஒரேநாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் கூட்ட நெரிசல், காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்க்க இவ் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்