Friday, April 25, 2014

நுகர்வோர் என்பவர் யார்?


இந்த மண்ணில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுமே நுகர்வோர்தான்! நாம் செலவழிக்கும் பணத்துக்கு ஈடாக பொருள் வாங்கும்போதோ, சேவையைப் பயன்படுத்தும் போதோ நுகர்வோர் ஆகிறோம். சற்றுப் பின்னோக்கிச் செல்வோமெனில், பண்டமாற்று முறையே வணிக முறையாக நிலவி வந்த காலமுண்டு. அதற்குப் பின் வந்த காலங்களில் வாணிபத்துக்குப் பணத்தை பயன்படுத்தும் முறை வந்தது. அந்தக் காலகட்டத்தில்கூட மனிதர்கள் நேர்மையாகவும், போற்றுதலுக்குரிய முறையிலும் வணிகம் நடத்தி வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. காலம் செல்லச் செல்ல மனிதனின் பேராசையால் வணிக முறையில் கலப்படம், பொருட்களின் எடை மற்றும் அளவு குறைத்தல், அதிக விலைக்கு
விற்றல், தரமற்ற போலிகளை விற்றல் என்று பல தவறான முறைகள் கையாளப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகின்றன.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர்தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ளுபடி ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு காலவிரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவமனைகள், கியாஸ் கம்பெனிகள், சப்-ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்-ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான், அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யா விட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்டபடியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்படும் நுகர்வோர் அதற்கான தீர்வைப் பெற நியாயம் கேட்டு கேள்வி எழுப்பாத வரை, தவறு செய்தவர்கள் அந்தத் தவறினை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பே இல்லை! நுகர்வோரே ராஜா என்பது எழுத்தளவில் மட்டுமல்லாமல் அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இந்தச் சட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி அதற்கான தீர்வை பெறுவதன் மூலமே நிலை நாட்டப்படும். நுகர்வோரின் உரிமை மீறல் மனித உரிமை மீறலே!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்